செவ்வாய், 2 ஜூலை, 2013

நூறு ரூபாயில் நெருப்பு வைக்காதீர்கள்!

எங்கள் இனிய பாரதிராஜா! 

உங்கள் பாசத்திற்குரிய தமிழ்மக்களில் ஒருவன் பேசுகிறேன்!தங்களது அன்னக்கொடி படம் பார்த்துவிட்டு இந்த பாசமடலை எழுதுகிறேன்! தமிழக கிராமங்களை மொத்தக்குத்தகைக்கு எடுத்து அவ்வப்போது அதிலிருந்து சில படங்களை தருவது உங்கள் பணி மற்றும் பாணி! 

"குத்தவச்ச" அல்லது "சமஞ்ச" "வாக்கப்பட்டு", "கூத்தியா" ,"ஈரக்கொலை", "கேப்பக்களி" , "வெடக்கோழி" 
       
            மற்றும் கிழவியின் சொலவடைகள் நிரம்பிய சொல்லாடல்களை நாங்களே மறந்து விட்ட நிலையில் நீங்கள் இன்னமும் இவற்றை மறக்காமல் படம் தவறாது பயன்படுத்துவது உங்கள் தீவிர பக்தியை காட்டினாலும் சில சமயம் உங்களுக்கு செலக்டிவ் அம்னீசியாவோ என்றும் அச்சமாக இருக்கிறது. 
        சில இளைஞர்கள் கஷ்டப்பட்டு சினிமாவை புதிய பாதைக்கு ப்ளே பட்டனை அழுத்தினால் வினாடியில் ஐம்பது வருடங்களை ரீவைண்ட் செய்துவிடுகிறீர்கள்! தேசிய விருதுகள் படங்களை நீங்கள் கொடுத்திருக்கிறீர்கள் என்பதும் அந்தப்படங்கள் அதற்கு தகுதியானவை என்பதும் எங்களுக்கு தெரியும்! 
       ‘அதற்காக ஓரிரு அழகான பிள்ளைகள் பெற்றுக்கொள்பவர் வாழ்நாளெல்லாம் பிள்ளை பெற்றுக்கொள்ள வேண்டியதில்லை’           என்பது எங்கள் தாழ்மையான கருத்து! 
        இப்போதெல்லாம் ஸ்கூல் கல்ச்சுரல்ஸ்களில் எல்.கே.ஜி பிள்ளைகள் கூட அத்தனை அழகாக பெர்பார்ம் செய்கிறதுகள்! எதற்கும் உதவாத ஆகாவழி ஆட்களை வலுக்கட்டாயமாக புகுத்துவதன் நோக்கம் என்ன என்பது புரிபடவே இல்லை! இரண்டு படங்களில் தமிழ் சினிமாவே உங்களுக்கு கடமைப்பட்டிருப்பதாக நீங்களே எண்ணுகிறீர்களோ என்னவோ?! அப்படி கையறு நிலையில் சினிமா இல்லை என்பதை உணருங்கள் இமயமே! நீங்கள் இனிமேல்தான் நிமிர்த்திவைக்க சினிமா ஒன்றும் அப்படி ஐ.ஸி.யூ வில் கிடக்கவில்லை! 
             அமீருக்கும், பார்த்திபனுக்கும் உயிர்பிச்சை கொடுத்துவிட்டு உங்கள் பிள்ளையின் வாழ்வில் மன்னள்ளிப்போடலாமா? தயவு செய்து நீங்கள் ஓய்வெடுத்துக்கொண்டு எங்களையும் கொஞ்சம் விட்டு வையுங்கள்! சீரியலுக்கு கூட ஒத்துக்கொள்ள முடியாத காட்சியமைப்புக்களை சினிமா என்று காட்டி எங்களின் நூறு ரூபாயில் நெருப்பு வைக்காதீர்கள்!

இப்படிக்கு
உங்கள் பாசத்திற்குரிய தமிழ்மக்களில் ஒருவன்.

பி.கு. தெலுங்கர், கன்னடர் போன்ற தமிழரல்லாத மற்றவர்களும் தங்கள் படத்தை காசு கொடுத்துத்தான் பார்க்கிறார்கள் என்பதை நினைவில் கொள்க!
-கே.எஸ். சுரேஷ்குமார்
{முகநூல் நண்பர்}